Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்பு மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. Ind vs pak ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் என நினைத்தால், ஒன் சைடு ஆட்டமாக இந்தியாவுக்கு சாதகமாக முடிந்திருக்கிறது இந்தப் போட்டி. இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்க்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் களமிறங்கினர். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்ததால், தொடக்கத்திலேயே இந்திய அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. அபிஷேக் பின்னர் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் அணி, தொடர்ச்சியாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, போட்டியின் போக்கை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. சில விக்கெட்களை இழந்தாலும், இறுதியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு டார்கெட் 176. இந்த இலக்கை விரட்டி களமிறங்கிய பாகிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே சரவெடியாக தாக்கினர். முதல் 6 ஓவர்களிலேயே 4 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய அணி, போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தியது. பொறுப்புடன் விளையாடி வந்த பாகிஸ்தான் வீரர் உஸ்மானும் 44 ரன்களில் ஆட்டமிழக்க அந்த தருணத்திலேயே, பாகிஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. இந்தியா அடுத்தடுத்து இந்தியாவின் வேகத்திலும் சுழலிலும் சிக்கி, பாகிஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து, 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது.பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஜடேஜா, ஜெய்ஸ்வால் இல்லை! - புதிய கேப்டன் ரியான் பராக் - அறிவிப்பை வெளியிட்ட RR
ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், Rajasthan Royals அணி இன்று தங்களின் புதிய கேப்டனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக் (Riyan Parag) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற டிரேடிங் செயல்பாடுகளில், ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சென்னை அணிக்கு சென்றதும், சென்னை அணியின் அனுபவ வீரர் ஜடேஜா (Ravindra Jadeja) ராஜஸ்தான் அணியில் இணைந்ததும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால், “ஜடேஜாவே புதிய கேப்டன் ஆகலாம்” என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவலாக இருந்தது. ஆனால், அந்த எல்லா கணிப்புகளையும் பின்னுக்கு தள்ளி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்ட அறிவிப்பில், ரியான் பராக் புதிய கேப்டன் என உறுதி செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை ஐபிஎல் தொடரில் 84 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக், மொத்தமாக 1,566 ரன்களை குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 141.85 ஆக இருப்பது, அவரின் அதிரடி பேட்டிங்குக்கு சின்ன சாம்பிள். இளம் வயதில் கிடைத்துள்ள இந்த கேப்டன் பொறுப்பு, அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் – இதுவரை கேப்டன்கள் பட்டியல் ஷேன் வார்னே ராகுல் டிராவிட ஷேன் வாட்சன் ஸ்டீவ் ஸ்மித் சஞ்சு சாம்சன் இந்தப் பட்டியலில் இப்போது ரியான் பராக் இணைந்துள்ள நிலையில், ராஜஸ்தான் ரசிகர்கள் மத்தியில் “இளம் கேப்டன் – புதிய யுகம்” என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
T20 WC: ஆஸ்திரேலியா ஆல் அவுட்; சம்பவம் செய்த ஜிம்பாப்வே! - கொழும்புவில் என்ன நடந்தது?
கொழும்புவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. Zimbabwe டாஸை ஆஸ்திரேலிய அணியே வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. கொழும்பு மைதானம் கொஞ்சம் மெதுவான மைதானம். சராசரி ஸ்கோரே 150-160 க்குள்ளாகத்தான் இருக்கும். இதை புரிந்து வைத்துக் கொண்டு ஜிம்பாப்வே அணி கால்குலேட்டிவாக ஆடியிருந்தது. பென்னட்டும் மருமணியும் ஓப்பனர்கள். 160 மார்க்கை எட்டினால் போதும் என்கிற மனநிலையில் நிதானமாக ஆடினர். பவர்ப்ளேக்குள் ஆஸ்திரேலிய அணி வார்சூயிஸ், மேக்ஸ்வெல், நேதன் எல்லீஸ் என 5 பௌலர்களை பயன்படுத்தியது. ஆனாலும் விக்கெட் கிடைக்கவில்லை. முதல் விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 61 ரன்களை சேர்த்தது. மருமணி அவுட் ஆனவுடன் ரியான் பர்ல் உள்ளே வந்தார். அடுத்ததாக ராசா. எல்லாருமே நிலைமையையும் சூழலையும் உணர்ந்து சௌகரியமாக ஒரு டார்க்கெட்டை எட்ட வேண்டும் என்கிற மனநிலையுடனேயே ஆடினர். விளைவு, ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்களை எட்டியது. பென்னட் அரைசதத்தை அடித்திருந்தார். Zimbabwe ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 170. பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது ஆஸ்திரேலியா. முசரபாணியும் எவன்ஸூம் விக்கெட் வேட்டை நடத்தினர். கீரனும் டிம் டேவிட்டும் டக் அவுட் ஆகினர். ஆஸ்திரேலிய அணி 29-4 என தடுமாறியது. இதன்பிறகு கூட்டணி சேர்ந்த ரென்சாவும் மேக்ஸ்வெல்லும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் இணைந்து 77 ரன்களை சேர்த்தனர். ஆனால், இவர்களாலும் ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ஜிம்பாப்வேயின் ஸ்பின்னர்கள் சுழல் ஜாலம் நடத்தினர். வேகப்பந்து வீச்சாளர்கள் நக்கிள் பால் போன்ற வேரியேஷன்களில் கலக்கினர். மேக்ஸ்வெல் 31ரன்களில் பர்லின் பந்தில் போல்டாகினார். கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு 56 ரன்கள் தேவை. 5 விக்கெட்டுகள் கையில் இருந்தது. ஆனால், இந்த 5 ஓவர்களை மசகட்சா, முசரபாணி, க்ரீமர் போன்றோர் லாவகமாக வீச, ஜிம்பாப்வேயின் பீல்டிங்கும் தீவிரமாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வென்றது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையிலும் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! - எப்படி வென்றது இந்தியா?
உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஏதேனும் சவால் இருக்குமோ என்று தோன்றியது. ஆனால், ஒரு சில ஓவர்களுக்கு நமீபியா பயம் காட்டியதே தவிர இந்திய அணி பெரிய சிரமம் ஏதுமின்றி வென்றிருக்கிறது. Ind vs Nam டெல்லி பேட்டிங் பிட்ச் என்பதால் எவ்வளவு பெரிய டார்கெட்டையும் சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நமீபியா முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. இந்திய அணியில் அபிஷேக்குக்கு பதில் சாம்சன் இணைந்திருந்தார். பும்ராவும் லெவனுக்குள் வந்திருந்தார். சாம்சன், இஷான் கிஷன் ஜோடி ஆரம்பத்திலிருந்தே அதிரடிதான். பவர்ப்ளேயில் மட்டும் 86 ரன்கள். சாம்சன் இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 3 சிக்சர்களை பறக்கவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். இஷான் கிஷன் ஓயவே இல்லை. ஸ்மித் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர்களை பறக்கவிட்டார். திலக் வர்மா ஒரு பக்கம் நின்று ஆட இஷான் கிஷன் வந்த பந்துகளையெல்லாம் பறக்கவிட்டார். எராஸ்மஸ் வீசிய 7 வது ஓவரில் இஷான் கிஷன் காலி. அவர் 24 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். Ishan Kishan முதல் 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 120 ரன்களை சேர்த்திருந்தது. இரண்டாம் பாதி ஹர்திக்குடையது. ஒரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருக்க, ஹர்திக் பாண்ட்யா நின்று ஆடி சிக்சர்களை பறக்கவிட்டார். இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நமீபியா அணிக்கு டார்கெட் 210. இந்திய அணி சார்பில் பவர்ப்ளேயில் அர்ஷ்தீப், ஹர்திக், துபே வீசியிருந்தனர். எல்லாருமே அடி வாங்கியிருந்தனர். பவர்ப்ளே முடிவில் நமீபியா அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 57 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டீங்கம்ப், ப்ரைலிங்க் போன்றோர் அதிரடியாக ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு ஸ்பின்னர்கள் வந்தனர். அக்சர் படேல் கொஞ்சம் அடி வாங்கவே செய்தார். அவரின் ஓவரில் எராஸ்மஸ் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டார். Varun Chakravarthy வருண் சக்கரவர்த்திதான் கேம் சேஞ்சர். 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மின்னொளியில் வருணின் கூக்ளிக்களை நமீபியாவின் பேட்டர்களால் கணிக்கவே முடியவில்லை. ஸ்டீங்கம்ப், நிக்கோல், ஸ்மித் ஆகியோர் அவரின் பந்தில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு போட்டி அப்படியே இந்தியாவின் கையில் வந்துவிட்டது. பும்ரா, ஹர்திக்கெல்லாம் சிறப்பாக வீச நமீபியா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. அடுத்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த க்ரூப்பில் பாகிஸ்தான் போட்டி மட்டுமே இந்தியாவுக்கு சவாலளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களும் வழக்கம்போல சொதப்பினால் பெரிய சுவாரஸ்யமே இல்லாமல் போகும்.
T20 WC: 'இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?'- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்
டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்.12) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை, நமீபியா எதிர்கொள்கிறது. India vs Namibia இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், நமீபியாவில் எங்களிடம் மின்னொளி வசதிகள் (floodlights) எதுவுமில்லை. கட்டமைப்பு ரீதியாக, இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாகும். நேபாள பிரீமியர் லீக், ILT20 மற்றும் உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மின்னொளியில் விளையாடிப் பழக்கமில்லை. இந்தப் போட்டிக்கு முன்னதாக எங்களுக்கு இரவு நேரப் பயிற்சி வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவிற்கு இரண்டு இரவு நேரப் பயிற்சி செஷன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். Namibia இப்போது கனடா அணி இரவு நேரப் பயிற்சியில் ஈடுபடப் போவதைப் பார்க்கிறேன். இதிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், நாங்கள் களமிறங்கி எங்களது நமீபிய பாணியில் போராடுவோம் என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.

26 C