SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
...

மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், 'மஹான் ஏர்' நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அந்த விமானத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக டெல்லிக்கு வரவிருந்த இந்த விமானம், தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் தனது சுகாதாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்திய உதவிப் பொருட்கள் ஈரானுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Mahan Air இந்த மோதல்களுக்கு மத்தியிலும், தனக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில், இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் செய்திகள் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா அனுப்பிய முதற்கட்ட மனிதாபிமான உதவிகளை ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நன்றியறிவிப்பு ஒரு அடையாளச் செயலாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், ``ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தகர்ப்போம். மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். ஈரானின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்கு இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த நேரடி மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்து போர் இன்னும் தீவிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது.

விகடன் 31 Mar 2026 10:23 am