பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்
வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக... பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன. அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும் பற்கள் இழப்பு, ஈறு நோய்களுக்கான ரிஸ்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்போருக்கு, வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், முறையான பல் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதிலும் நடைமுறை சவால்கள் இருப்பதால், அவர்கள் வாய் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட இப்படிப்பட்ட முதியோர்களுக்கு பல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கலாம். அவர்களால் நீண்ட நேரம் உட்கார முடியாது அல்லது கருவிகளைக் கண்டு பயப்படலாம். அவர்களுக்கு வலி குறைந்த எளிய சிகிச்சைகள் (Minimally Invasive Treatments) மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை உணர்த்தியுள்ளது. நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம். சோர்வு, மறதி, மன அழுத்தம், தசைப்பிடிப்பு... வைட்டமின் பி12 குறைபாடு -அறிகுறிகள் முதல் தீர்வுகள் வரை இந்த ஆய்வறிக்கை சொல்வது உண்மைதானா... வாய் சுகாதாரத்துக்கும் அல்சைமர் நோய்க்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம். ''வாய் சுகாதாரம் மற்றும் அல்சைமர் நோய்க்கு இடையிலான தொடர்பு சற்றே சிக்கலானது. இது ஒரு சுழற்சி போன்றது... ஒன்றினால் மற்றொன்று பாதிக்கும். மூளை செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அமிலாய்டு (Amyloid) மற்றும் டாவ் (Tau) எனப்படும் புரதங்கள் நச்சுப் படிமங்களாகப் படிந்து, செல்களைச் சாகடிக்கின்றன. இந்த நச்சுகளால் மூளை செல்கள் அழிவதால், காலப்போக்கில் மூளையின் அளவு சுருங்குகிறது. குறிப்பாக, நினைவாற்றலுக்குப் பொறுப்பு வகிக்கும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதி முதலில் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது. அல்சைமர் நோய் ஒருவரின் மூளையைப் பாதிப்பதால், அவர் சுய பராமரிப்பை (Self-care) மறந்து விடுகிறார். சிறுவயதில் கற்றுக்கொண்ட அடிப்படைப் பழக்கங்கள் மறந்து போவதால், அவர்களின் வாய் சுகாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. சுய பராமரிப்பு என்பது நாம் வளரும்போது சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளின் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம். இந்தத் திறன் இழக்கப்படும்போது, அந்த நபரின் ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதில் இயல்பாகவே வாய் மற்றும் பற்களின் சுகாதாரமும் அடங்கும். எனவே, அல்சைமர் நோயாளிகளுக்கு வாய் சுகாதாரமின்மையைக் காண்பது அசாதாரணமானது அல்ல. சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். Alzheimer's Disease: நினைவுகள் நழுவும் நிஜ உலகம்... அதிகரிக்கும் அல்சைமர் பாதிப்பு... இன்னொரு புறம், சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். இந்தத் தொற்றுகள் உடலில் ஒருவித அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்குகின்றன. இந்த வீக்கம் மூளைக்குச் செல்லும்போது, அங்கும் பாதிப்பை (Neuroinflammation) ஏற்படுத்துகிறது. இதுதான் அல்சைமர் நோயில் மூளையில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. மூளையில் நச்சுப் படிமங்கள் (Plaques and Tangles) உருவாகக் காரணமாகிறது. இதுவே அல்சைமர் நோய் தீவிரமடைய வழிவகுப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து கேட்பதற்குச் சரியாக இருப்பது போல தோன்றினாலும், இது இன்னும் அறிவியல்ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளும், தரவுகளும் வந்த பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்கிறார் டாக்டர் மீனாட்சி சுந்தரம். Sudden Death Syndrome: அச்சுறுத்தும் இளவயது திடீர் மரணங்கள்! - அலர்ட் ஆகவேண்டிய தருணம் இது...
Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?
Doctor Vikatan: எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி. குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது கூகுள். கல்யாண முருங்கையை யார், எப்படி, எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. சித்த மருத்துவர் அபிராமி நீங்கள் குறிப்பிடுகிற கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம். இதன் கிளைகளில் முட்கள் இருப்பதால் இது 'முள் முருங்கை' என்றும், 'முருக்க மரம்' என்றும்கூட அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் விதையைத் தரையில் தேய்த்து உடலில் வைத்தால் சூடாக இருக்கும். கிராமங்களில் இதை 'நெருப்புக்கொட்டை' அல்லது 'சூட்டுக்கொட்டை' என்று விளையாட்டாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். சாதாரண முருங்கைக்கீரை அனைவருக்கும் நல்லது என்பதை எல்லோரும் அறிவோம். அதை உலகமே 'சூப்பர் ஃபுட்' என்று கொண்டாடுகிறது. கல்யாண முருங்கை அதற்குச் சற்றும் சளைத்ததில்லை. குறிப்பாக, பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இன்று பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வலிகள், எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis), உடல் பருமன் என பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல முக்கியப் பிரச்னைகளுக்கு கல்யாண முருங்கைக் கீரை அற்புதமான தீர்வுகளைத் தருகிறது. முருங்கைக்கீரை பெண் உடல், உணர்வு, உணவு - 13: தொடர்ந்து மாறும் பீரியட்ஸ் சுழற்சி; மருந்துகள் இல்லாமலே சரி செய்யலாம்! கல்யாண முருங்கை இலைகளைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு பொடியை சாதாரண நீரில் கலந்து 2 முதல் 3 மாதங்கள் குடித்து வந்தால், பிசிஓடி, முறைதவறிய மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பைக் கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும். கல்யாண முருங்கைக்கீரை மதுரையில் மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து 'கல்யாண முருங்கை வடை' அல்லது 'முள் முருங்கை வடை' செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். Doctor Vikatan: முருங்கைக்கீரை கிடைக்காதபோது, அதை கேப்ஸ்யூல் வடிவில் எடுத்துக்கொள்ளலாமா? கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது. இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... உங்கள் வீட்டில் தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?
Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டமின் டி குறைபாடு வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா சன் புரொடக்ஷன் ஃபேக்டர் என்பதன் சுருக்கமே எஸ்பிஎஃப் (SPF). அல்ட்ராவயலட் எனப்படும் யுவி கதிர்கள் எந்த அளவுக்கு நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து இது தேர்வு செய்யப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 30 நிமிடங்களுக்குள்ளேயே உங்கள் சருமம் யுவி கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் என நினைத்தால் எஸ்பிஎஃப் 30 உள்ளது போல தேர்ந்தெடுக்கலாம். அதைப்போல மும்மடங்கு அதாவது 90 நிமிடங்களுக்கு அந்த சன் ஸ்கிரீன் உங்களுக்குப் பாதுகாப்பு தரும். நம்முடைய வெப்பநிலைக்கு, எல்லோருமே 30-க்கு மேல் எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீன்தான் உபயோகிக்க வேண்டும். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதுவே எஸ்பிஎஃப் 100 இருந்தால், அது 98 சதவிகிதம் பாதுகாப்பு தரும். அதில் பெரிய வித்தியாசம் இருக்காது. 'பிராட் ஸ்பெக்ட்ரம்' என்று சொல்வோம். அதாவது யுவிஏ, யுவிபி கதிர்களிடமிருந்து பாதுகாப்பளிப்பதாக இருக்க வேண்டும். தண்ணீரோ, வியர்வையோ பட்டால் சன் ஸ்கிரீன் வழிந்து ஓடும்படி இருக்கக்கூடாது. எனவே, அது வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக, ஸ்வெட் ரெசிஸ்டன்ட்டாக இருக்க வேண்டியது அவசியம். எஸ்பிஎஃப் 50 இருந்தால் இன்னும் சிறப்பு. அது 97 சதவிகிதம் பாதுகாப்பு தரும். Doctor Vikatan: சன் ஸ்கிரீன் தொடங்கி, ஃபேஸ்வாஷ் வரை... Summer-ல் cosmetics-ஐ மாற்ற வேண்டுமா? சருமத்தில் தடவும்போது வெள்ளைப் படலமாகவோ, கறுப்பாகவோ தெரியக்கூடாது. சருமத்தின் துவாரங்களை அடைக்காதபடி (non-comedogenic ) இருக்க வேண்டும். பருக்களை ஏற்படுத்தக்கூடாது. வைட்டமின் டி குறைபாடு என்பது இன்று பரவலாகக் காணப்படுகிற பிரச்னையாக இருக்கிறது. இதற்கு மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வதுதான் தீர்வு. சன் ஸ்கிரீனை யாரும் உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவிக்கொள்ளப் போவதில்லை. வைட்டமின் டி ஊடுருவ வாய்ப்பில்லாத அளவுக்கு சன் ஸ்கிரீன் தடையாக இருக்கப்போவதும் இல்லை. அந்த வகையில் சன் ஸ்கிரீன் பயன்பாட்டால் வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பே இல்லை. எனவே, பயமின்றி சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம்.
Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?
Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று ஒரு வீடியோ பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை... பீரியட்ஸின் போது இப்படி சருமத்தில் மாற்றங்கள் வருமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா சருமநல மருத்துவர் பூர்ணிமா பீரியட்ஸுக்கு முன்பும் பிறகும் சருமத்தில் இப்படி மாற்றங்கள் வருவது இயல்புதான். பீரியட்ஸ் முடிந்த பத்து நாள்களில் சருமம் வழக்கத்தைவிட பளபளப்பாக, பூரிப்பாக இருப்பதுபோல உணர்வார்கள். காரணம், ஹார்மோன்கள். அதுவே, பீரியட்ஸுக்கு ஒன்றிரண்டு நாள்கள் முன்பு முகம் முழுவதும் பருக்கள், பொலிவற்ற சருமம் என மாறிப்போயிருக்கும். அதற்கு காரணமும் ஹார்மோன்கள்தான். அவற்றின் ஏற்ற, இறக்கத்துக்கேற்பவும் சருமத்தின் தன்மை வேறுபடும். திடீரென முகத்தில் ஒரு பருவையோ, கரும்புள்ளியையோ பார்க்கும்போது நிச்சயம் கவலையாகத்தான் இருக்கும். அதை ஒரே இரவில் சரிசெய்ய நினைத்து, பருவின் மேல் டூத் பேஸ்ட்டை வைப்பது, புதினாவை அரைத்துத் தடவுவது, கிராம்புத் தைலம் உபயோகிப்பது, எலுமிச்சை சாறு தேய்ப்பது, கிள்ளுவது போன்றவற்றைச் செய்யவே கூடாது. அப்படியெல்லாம் செய்தால் அந்த இடத்தில் தழும்பு ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி பருக்கள் வரும் என்ற நிலையில், மருத்துவரிடம் பேசி, ரெகுலராக உபயோகிக்கக்கூடிய க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்துவைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்... முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? அரிப்பு இருந்தால் மாய்ஸ்ச்சரைசர் மட்டும் தடவவும். ஒரு வாரம் பொறுத்திருந்து, அரிப்பு குறையாவிட்டாலோ, கூடவே வலியோ, வீக்கமோ இருந்தாலோ மருத்துவரை அணுகலாம். எல்லாப் பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் தடவுவது சரியானதல்ல. அதிலும் சிலர், சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஃப்ரெஷ்ஷாக பறித்து உள்ளே உள்ள ஜெல்லை அப்படியே சருமத்தில் தடவுவார்கள். அதுவே சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கையான பொருள்கள் தீர்வாகாது. இன்ஃபெக்ஷனுக்கெல்லாம் சோற்றுக் கற்றாழை ஜெல் மருந்தாகாது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை. வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என் தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு? -Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination). நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை. உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை. உடல் சோர்வாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன. உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை. டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் - எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்! தற்போது நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே சிறந்தது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

29 C