வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!
உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றும் பல உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர் வட இந்தியாவின் “பச்சைக் கவசம்” என அழைக்கப்படுவதற்குக் காரணம், அதன் இயற்கை பாதுகாப்பு பண்புகளே ஆகும். ஆரவல்லி 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்வைத்த புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே சட்டரீதியாக ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், இதுவரை ஆரவல்லி பகுதியாக கருதப்பட்ட சிறிய மலைகள், அடிவார நிலங்கள் மற்றும் இணை நிலப்பரப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் இந்த தீர்ப்பால் ஆரவல்லி நிலப்பரப்பின் சுமார் 80 முதல் 90 சதவிகிதம் வரை பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு, டெல்லி–என்.சி.ஆர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நேரடி போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இந்த தீர்ப்பு ஆரவல்லி பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப்பணிகள், கட்டுமான வளர்ச்சி மற்றும் வன அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கவலை தெரிவிக்கின்றனர். ஆரவல்லி ஆரவல்லி மலைத் தொடரின் அழிவு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைதல், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு, காற்று மாசுபாடு தீவிரமாதல் மற்றும் பாலைவனமாக்கல் வேகமடைவது போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். குறிப்பாக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட பலர், இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என்றும், வருங்கால தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆரவல்லி மொத்தத்தில், ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட வரையறை மாற்றம் அல்ல; நீர், காற்று, உயிரியல் பல்வகைமை மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. அதனால், ஆரவல்லியின் பாதுகாப்பு குறித்த போராட்டம் இன்று வட இந்தியா முழுவதும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.
அணுசக்தி துறையில் தனியார்: `சூதாட்டத்தில் 140 கோடி மக்களின் உயிர்'- எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்
இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளுக்கு நிலையான மின்சாரத்தைப் உற்பத்திசெய்யும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானியின் அதானி பவர், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் & பவர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி போன்ற நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் இடங்களையும் தேர்வு செய்திருக்கின்றன. தற்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த 15-ம் தேதி 'அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மசோதா 2025 (SHANTI)'-வை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம் இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்குரிய பிரிவுகளைக் கொண்ட மசோதா, அவசரகதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்தனர். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், அணுசக்தித் திறனை விரிவாக்குவதற்குத் தேவையான மூலதனத்தின் தேவைக்காக தனியாரை அனுமதிக்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவுக்குப் பின்னணியில் இருக்கும் சிக்கல்களை இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதன் அடிப்படையில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர ராஜனை தொடர்புகொண்டு பேசினோம். பல அதிர்ச்சித் தகவல்களுடன், இந்த மசோதா திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கினார். இந்த மசோதா குறித்துப் பேசிய சுந்தரராஜன், ``அணுசக்தியை நிர்வகிக்கும் இந்தியாவின் சட்டக் கட்டமைப்பு A FL 1962 (Atomic Energy Act), FLL 2010 (The Civil Liability for Nuclear Damage Act, 2010-CLNDA) சட்டங்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் இவ்விரு சட்டங்களையும் திரும்பப் பெற்றுவிட்டு இவற்றை ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அணுசக்தியின் நிலையான பயன்பாடு மற்றும் மேம்பாட்டு மசோதா, 2025-ஐ (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Bill, 2025 - SHANTI) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டத்தில் 140 கோடி மக்களின் உயிர்! மசோதாவின் பெயரில் 'சாந்தி' (Shanti - அமைதி) இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் உயிருக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் நேரடியான அச்சுறுத்தல் இருக்கிறது. குறிப்பாக அணு ஆற்றலைத் தனியார்மயமாக்குவது, அதிலும் யுரேனியம் செறிவூட்டல் (Uranium Enrichment) போன்ற தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயல்பாடுகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்பது, 140 கோடி இந்தியர்களின் உயிரைச் சூதாட்டத்தில் வைக்கும் செயல் என்றால் அது மிகையல்ல. அணுசக்தித் துறையை நவீனப்படுத்துவதற்காக இம்மசோதா கொண்டு வரப்படுவதாகக் கூறப்பட்டாலும் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்கும் முடிவுகளுடன் இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை அழிக்கும் பணி அணு உலை இம்மசோதாவின் முகவுரையில் அணுசக்தி தூய்மையான எரிசக்தியென வரையறுக்கப்பட்டிருப்பதே தவறானது. அணுவுலையில் எரிபொருளாகப் பயன்படும் யுரேனியம், தோரியம் உள்ளிட்டவற்றை அகழ்ந்தெடுக்கும் பணி நச்சு அபாயம் மிகுந்த இயற்கை வளங்களை அழித்து மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும். மேலும் சரிசெய்யவே முடியாத மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் கதிரியக்க அபாயம் மிகுந்தவை அணுவுலைகள், அணுவுலைக் கழிவுகளோ பல ஆயிரமாண்டுகளுக்கு கதிர்வீச்சுத் தன்மையுடையதாகவும் பாதுகாப்பாக மேலாண்மை செய்ய முடியாதவையாகவும் இருக்கின்றன. எரிபொருள் அகழ்வு முதல் மின்னுற்பத்தி, அணுவுலைக் கழிவு மற்றும் அதன் மேலாண்மையென முழு சுழற்சியையும் கருத்தில் கொண்டால் அணுவுலையோ, அணுசக்தியோ எந்தவிதத்திலும் தூய்மையான ஆற்றல் கிடையாது. தனியாருக்கு வானளாவிய அதிகாரம் இம்மசோதாவின் பிரிவு 3(1)(c) மற்றும் (e) தனியார் நிறுவனங்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கும் அணுவுலை மற்றும் அணுமின் நிலையம் சார்ந்த செயல்பாடுகளை இந்தியாவில் இயக்கிக் கொள்வதற்கான அனுமதியை வழங்குகிறது. 1962 சட்டத்தின்படி அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி கிடையாது. இம்மசோதாவின் கீழ் தனியாருக்கு அணுசக்தித் துறையில் வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இம்மசோதாவின் பிரிவு 3(2)) [1]-ன் படி அணுமின்சார உற்பத்தியில் உள்ள பல்வேறு படி நிலைப் பணிகளையும் மேற்கொள்ளத் தனியாருக்கு அனுமதியும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக... அணு உலை (அ) அணுமின் நிலையம் அல்லது உலையைக் கட்டுதல், உடமையாக நிர்வகித்தல், இயக்குதல் செயலிழக்கச் செய்தல்; (ஆ) யுரேனியம்-235 ஐ ஒன்றிய அரசு அறிவிக்கக்கூடிய வரம்பு மதிப்புவரை மாற்றுதல், சுத்திகரித்தல் மற்றும் செறிவூட்டுதல், மற்றும் பிற தனிமப் பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு. செயலாக்கம் அல்லது அகற்றல் உள்ளிட்ட அணு எரிபொருளின் (இ) கதிரியக்க அபாயமிகுந்த அணுவுலை எரிபொருள், அணுக்கழிவு, வேறு ஏதேனும் வகுத்துரைக்கப்பட்ட தனிமங்களைச் சேமித்து வைத்தல் மற்றும் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குக் கொண்டு செல்லுதல். (ஈ) அணுவுலை எரிபொருள் அல்லது வகுத்துரைக்கப்பட்ட தனிமத்தின் இறக்குமதி, ஏற்றுமதி, கையகப்படுத்துதல், அல்லது வைத்திருத்தல். (உ) வகுத்துரைக்கப்பட்ட உபகரணங்களின் இறக்குமதி, ஏற்றுமதி, கையகப்படுத்துதல் அல்லது பயன்பாடு; (ஊ) வகுத்துரைக்கப்பட்ட தனிமப் பொருள் அல்லது வகுத்துரைக்கப்பட்ட உபகரணங்களின் மேம்பாடு, உற்பத்தி அல்லது பயன்பாட்டிற்குத் தேவையான ஏதேனும் தொழில்நுட்பம் அல்லது மென்பொருளின் இறக்குமதி அல்லது ஏற்றுமதி. இந்த அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணு ஆற்றல் வணிக வாய்ப்பல்ல... அணு உலை அணு ஆற்றல் என்பது சாதாரண மின்னுற்பத்தித் துறை அல்ல. இது தேசப் பாதுகாப்பு, பன்னாட்டு அரசியல், பல்வேறு தலைமுறைகளின் இருத்தலியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஆனால், இம்மசோதா, அணு ஆற்றலை ஒரு வணிக வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறது. தனியார் நிறுவனங்களின் முதன்மை நோக்கம் லாபம் மட்டுமே. பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மனித உயிர் இவை அனைத்தும் லாபக் கணக்கில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும். இதற்கு வரலாறே சாட்சி. புகுஷிமா அணு விபத்து (Fukushima Disaster) என்பது, வடிவமைப்புக் குறைபாடுகள் (design improvements) மற்றும் அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததின் விளைவு என்பதை ஜப்பான் நாடாளுமன்றக் குழுவே உறுதிசெய்து, Fukushima is a man made disaster என்று உறுதிபட அறிவித்துவிட்டது. செலவைக் குறைக்க, பாதுகாப்பை புறக்கணித்ததன் விளைவாக, இன்று வரை ஜப்பான் மக்கள் அதன் விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே பாதையை இந்தியா ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இன்றுவரை ஒன்றிய அரசு புல்வாமா தாக்குதல் அல்லது பஹல்காம் சம்பவம். டெல்லி செங்கோட்டைக் குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாதத் தாக்குதல்களில் உண்மையான குற்றவாளிகளை முழுமையாகக் கண்டறிந்து, மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியதில்லை. பஹல்காம் இந்நிலையில், அணு ஆற்றல் போன்ற மிக மிக ஆபத்தான துறையைத் தனியார் நிறுவனங்களின் கையில் கொடுப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒரு கிராம் யுரேனியம் கூடத் தீவிரவாதிகளின் கைகளில் சென்றால், அது ஒரு நகரத்தை அல்ல -முழு இந்தியாவையே அழிக்கும் சக்தி கொண்டது. கதிரியக்கமிகுந்த பேரழிவு அபாயத்தை ஏற்படுத்தவல்ல தனிமங்களைக் கையாளும் கட்டற்ற சுதந்திரத்தைத் தனியாருக்கு வழங்குவது தேசப் பாதுகாப்பிற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலில் சென்று முடியும். ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கக் காரணமாக இருந்த போபால் விஷ வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நீதிக்காகவும் உரிய இழப்பீட்டிற்காகவும் போராடி வருகின்றனர். அபாயகரமான கழிவுகளைக் கையாள சட்டப்படி பெற வேண்டிய அனுமதியைப் புதுப்பிக்காமல் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் சட்டவிரோதமாக நச்சுக் கழிவுகளை ஓடையில் கொட்டியிருந்தது. கொடைக்கானலில் செயல்பட்டு வந்த யுனிலீவர் நிறுவனம் தனது நச்சுமிகு பாதரசக் கழிவுகளைக் காட்டில் கொட்டி நிலத்தையும் நீரையும் நச்சாக்கியது. இப்படி எண்ணற்ற உதாரணங்கள் நம்முன் உள்ளன. மேற்கூறியவற்றுடன் ஒப்பிடுகையில் யுரேனியம், தோரியம் உள்ளிட்ட கதிரியக்க அபாயம் கொண்ட தனிமங்களைத் தனியார் நிறுவனங்கள் கையாள அனுமதிப்பது பல நூறு மடங்கு அபாயம் நிறைந்ததாகும். அணு உலை இந்தியாவிலேயே உச்சகட்ட ராணுவப் பாதுகாப்பில் உள்ள ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்கியதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். ஒன்றிய அரசின் பாதுகாப்பில் உள்ள நாட்டின் தலைநகரான டெல்லியில் செங்கோட்டை அருகே வெடிபொருட்களைக் காரில் எடுத்துவந்து வெடிக்க வைத்த தீவிரவாத சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இப்படியாக அண்மைக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. தீவிரவாதிகளின் கையில் குறைந்த அளவு யுரேனியம் கிடைத்தாலே அது தேசப் பாதுகாப்புக்கு பேராபத்தாகும். இந்நிலையில் கதிரியக்க அபாயமிகு தனிமங்களைத் தனியார் கையாள அனுமதிப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. குற்றவாளிகளுக்கு முழு பாதுகாப்பு: இம்மசோதாவில் மிக ஆபத்தான, அதே நேரத்தில் மிகக் கேடான அம்சம் என்னவென்றால், Right to Recourse என்ற உரிமையை முழுமையாக நீக்கியிருப்பது. அதாவது, அணு விபத்து ஏற்பட்டால், உபகரணங்களை வழங்கியவர் அல்லது வடிவமைப்பாளர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள 2010 அணுவிபத்து இழப்பீடுச் சட்டத்தில் (The Civil Liability for Nuclear Damage Act, 2010-CLNDA) 8 அணுவுலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீட்டுக்கு அணுவுலையை இந்தியாவுக்கு வழங்கிய நிறுவனத்தையும், உபகரணங்களை வழங்கிய நிறுவனத்தையும் பொறுப்பாக்கக்கூடிய பிரிவு 17(b) உள்ளது. அணு உலை இப்பிரிவை மாற்றும் முயற்சிகளை அப்போதைய பா.ஜ.க.வும் கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மசோதாவில் இப்பிரிவு முற்றிலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விவாதத்திற்குப் பின்னர் அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது சட்டமா அல்லது அவலக்கூத்தா?? ஒரு தனியார் நிறுவனம் குறைபாடான வடிவமைப்பை வழங்கினாலும், பாதுகாப்பு விதிகளை மீறினாலும், அல்லது தெரிந்தே அலட்சியமாகச் செயல்பட்டாலும் -அவர்களை எதிர்த்துச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. இது அணுவுலை விநியோகஸ்தர்களுக்கான முழுப் பாதுகாப்புக் கவசம். மக்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. அலட்சியம் செய்தாலும் தண்டனை இல்லை இது சட்டமா, அவலக்கூத்தா? இம்மசோதாவின் மற்றொரு அதிர்ச்சி தரும் அம்சம் என்னவென்றால், அணுவுலையை இயக்கும் நிறுவனம் (operator) வேண்டுமென்றே (wilfully) அல்லது அலட்சியமாக (negligence) விபத்து ஏற்படக் காரணமாக இருந்தால் அவர்களுக்குரிய தண்டனை வழங்க முடியாது. ஒரு சிறிய தொழில்சாலையில்கூடப் பாதுகாப்பு விதிகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும். ஆனால் அணுமின் நிலையத்தில், லட்சக்கணக்கான மக்களின் உயிரை ஆபத்தில் தள்ளினாலும், தண்டனை இல்லை. யாருடைய கட்டாயத்திற்குப் பயந்து மக்களின் உயிரை ஒன்றிய அரசு பணயம் வைக்கிறது? அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் பிரதமர் மோடி புதிய மசோதா அணுச் சேதம் (Nuclear Damage) தொடர்பான எந்த வழக்கையும் சிவில் நீதிமன்றங்கள் ஏற்கக் கூடாது எனக் கூறுகிறது. மேலும், எந்த நீதிமன்றமும் அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தடையாணை (injunction) வழங்க முடியாது என்றும் குறிப்பிடுகிறது. இந்திய குடிமக்களுக்குள்ள நீதிமன்றம்/நீதி அணுகுவதற்கான அடிப்படை உரிமை (Right to Access Justice) இங்கு பறிக்கப்படுகிறது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே (Basic Structure) அவமதிக்கும் செயலாகும். நீதிமன்றங்கள் இல்லாத இடத்தில், சட்டம் இல்லை. சட்டம் இல்லாத இடத்தில், ஜனநாயகம் இல்லை. 1 கோடி ரூபாய் அபராதமும், சொற்பமான காப்பீடும் அணு மின்னுற்பத்திச் செயல்பாடுகளில் சிறிய முதல் தீவிரமான விதிமீறல்களுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் மட்டுமே அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் 1 கோடி ரூபாய் அபராதம் மற்றும் மிகக் குறைந்த அளவிலான காப்பீடு (insurance) என்பது மிகவும் சொற்பமானது. இது என்ன நியாயம்? ஒரு அணு மின்னுற்பத்திச் செயல்பாடுகளில் விதிமீறல் நடந்தால், அதன் விளைவு பல தலைமுறைகள்வரை நீடிக்கும். நிலம், நீர், காற்று - அனைத்தும் விஷமயமாகும். ஆனால், அதற்கான இழப்பீடு ஒரு நடுத்தர நிறுவனத்தின் ஆண்டு லாபத்திற்கும் குறைவானது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பெரியளவிலான அணுவுலை விபத்து நடந்தால் அவ்வுலையின் உற்பத்தித் திறனைப் பொறுத்து ரூ. 100 கோடி முதல் ரூ.3000 கோடிவரை இழப்பீடு செலுத்தினால் போதுமானது என்கிறது புதிய மசோதா. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புகுஷிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய பாதிப்பைச் சரிசெய்வதற்கு தற்போது வரை ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது இன்னும் உயரும் எனவும் கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கே செர்னோபில் அணுவுலை விபத்துதான் காரணம் எனக் கோர்பசேவ் கருதினார். ஒரு அணுவுலை விபத்து என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணங்கள் நம் கண்முன்னே இருந்தும் இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அணுவுலையை இயக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், உபகரணங்கள் வழங்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதுகாப்பு மேம்பாடுகளை (design improvements) அலட்சியம் செய்வதற்கான வாய்ப்பாக அமைந்துவிடும். அணுசக்தி மசோதா - மோடி என்ன நடந்தால் என்ன நம்மால் எளிதில் வழங்க முடிகிற குறைந்த அபராதம் செலுத்தினால் போதும் என்கிற மனநிலை உருவாகும். இதுதான் புகுஷிமா பேரழிவுக்கு வழிவகுத்த மனநிலை. இம்மசோதா என்பது வளர்ச்சிக்கானது அல்ல. இது தேசத்தின் பாதுகாப்பை விற்பனை செய்யும் மசோதா, அணுசக்தித் துறையைத் தனியார்மயமாக்குவது, இந்தியாவின் எதிர்காலத்தை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளிகள் கைகளில் ஒப்படைப்பதுக்குச் சமம். இம்மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறாவிட்டால், வரலாறு பா.ஜ.க. அரசை மன்னிக்காது, 140 கோடி மக்களின் உயிர், லாபக் கணக்கில் ஒரு வரியாக மாறிவிடக் கூடாது. என உறுதியான குரலில் பேசி முடித்தார்.
நெல்லை: சுவர் ஏறிக் குதித்து கோயிலுக்குள் புகுந்த கரடி; துணிகளைக் கடித்து ஆக்ரோஷம்;அச்சத்தில் மக்கள்
நெல்லை மாவட்டம், களக்காடு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, யானை, கரடி, சிறுத்தை, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன. இதில், சில வன விலங்குகள் மலையடிவார கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீப காலமாக கரடிகள் வனப்பகுதியிலிருந்து குட்டிகளுடன் வெளியேறி பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கி விடுகின்றன. கரடி இரவு நேரங்களில் வீடு, கடை, கோயில்களுக்குள் புகுந்து பிடித்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு செல்கின்றன. உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில் ஆக்ரோஷத்தில் அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்திவிட்டுச் செல்கின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவு நேரங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, வனத்துறையினருக்குப் பல முறை கோரிக்கை வைத்தும் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கரடிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், களக்காடு அருகிலுள்ள பெருமாள்குளம் கிராமத்திற்குள் நுழைந்த ஒரு கரடி, அங்குள்ள அம்மன் கோயிலின் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து நுழைந்து உணவு தேடியுள்ளது. உணவு எதுவும் கிடைக்காததால், அங்கிருந்த துணி மூட்டைகளைக் கடித்து குதறியுள்ளது. பின்னர் கோயிலில் இருந்து வெளியேறி கிராமத்தின் சாலை வழியே செளகரியமாக நடந்து சென்றுள்ளது. குடியிருப்புக்குள் புகுந்த கரடி இந்தக் காட்சிகள், கோயிலின் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளன. கரடிகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரடி மட்டுமல்லாமல் சமீப நாட்களாக யானைகள், காட்டுப்பன்றிகளும் மலையடிவார கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து அட்டகாசம் செய்து மக்களை அச்சப்படுத்தி வருகின்றன. சிறுத்தைகளும் வீடுகளுக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளான கோழி, ஆடு, நாய்களைக் கடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன. உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

28 C