'தீப்பொறியாக நமீபியா; ஊதி அணைத்த மென் இன் ப்ளூ! - எப்படி வென்றது இந்தியா?
உலகக்கோப்பைப் போட்டிகளின் முதல் சுற்றில் இந்தியா போன்ற பெரிய அணிகளுக்கு பெரும்பாலும் சிக்கல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் சின்னச்சின்ன அணிகளெல்லாம் சிறப்பாக ஆடுகின்றன. அதனால் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு ஏதேனும் சவால் இருக்குமோ என்று தோன்றியது. ஆனால், ஒரு சில ஓவர்களுக்கு நமீபியா பயம் காட்டியதே தவிர இந்திய அணி பெரிய சிரமம் ஏதுமின்றி வென்றிருக்கிறது. Ind vs Nam டெல்லி பேட்டிங் பிட்ச் என்பதால் எவ்வளவு பெரிய டார்கெட்டையும் சேஸ் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நமீபியா முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தது. இந்திய அணியில் அபிஷேக்குக்கு பதில் சாம்சன் இணைந்திருந்தார். பும்ராவும் லெவனுக்குள் வந்திருந்தார். சாம்சன், இஷான் கிஷன் ஜோடி ஆரம்பத்திலிருந்தே அதிரடிதான். பவர்ப்ளேயில் மட்டும் 86 ரன்கள். சாம்சன் இன்னிங்ஸ் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 3 சிக்சர்களை பறக்கவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். இஷான் கிஷன் ஓயவே இல்லை. ஸ்மித் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர்களை பறக்கவிட்டார். திலக் வர்மா ஒரு பக்கம் நின்று ஆட இஷான் கிஷன் வந்த பந்துகளையெல்லாம் பறக்கவிட்டார். எராஸ்மஸ் வீசிய 7 வது ஓவரில் இஷான் கிஷன் காலி. அவர் 24 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். Ishan Kishan முதல் 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 120 ரன்களை சேர்த்திருந்தது. இரண்டாம் பாதி ஹர்திக்குடையது. ஒரு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருக்க, ஹர்திக் பாண்ட்யா நின்று ஆடி சிக்சர்களை பறக்கவிட்டார். இந்திய அணி 200 ரன்களை கடந்தது. 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நமீபியா அணிக்கு டார்கெட் 210. இந்திய அணி சார்பில் பவர்ப்ளேயில் அர்ஷ்தீப், ஹர்திக், துபே வீசியிருந்தனர். எல்லாருமே அடி வாங்கியிருந்தனர். பவர்ப்ளே முடிவில் நமீபியா அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 57 ரன்களை எடுத்திருந்தது. ஸ்டீங்கம்ப், ப்ரைலிங்க் போன்றோர் அதிரடியாக ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு ஸ்பின்னர்கள் வந்தனர். அக்சர் படேல் கொஞ்சம் அடி வாங்கவே செய்தார். அவரின் ஓவரில் எராஸ்மஸ் அடுத்தடுத்து சிக்சர்களை பறக்கவிட்டார். Varun Chakravarthy வருண் சக்கரவர்த்திதான் கேம் சேஞ்சர். 2 ஓவர்களில் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மின்னொளியில் வருணின் கூக்ளிக்களை நமீபியாவின் பேட்டர்களால் கணிக்கவே முடியவில்லை. ஸ்டீங்கம்ப், நிக்கோல், ஸ்மித் ஆகியோர் அவரின் பந்தில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு போட்டி அப்படியே இந்தியாவின் கையில் வந்துவிட்டது. பும்ரா, ஹர்திக்கெல்லாம் சிறப்பாக வீச நமீபியா அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. அடுத்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த க்ரூப்பில் பாகிஸ்தான் போட்டி மட்டுமே இந்தியாவுக்கு சவாலளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களும் வழக்கம்போல சொதப்பினால் பெரிய சுவாரஸ்யமே இல்லாமல் போகும்.
T20 WC: 'இந்திய அணிக்கு மட்டும் வாய்ப்பு, எங்களுக்கு?'- அதிருப்தியை வெளிப்படுத்திய நமீபியா கேப்டன்
டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, நமீபியா அணிக்கு இரவுநேரப் பயிற்சி வழங்கப்படாதது குறித்து அதன் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். 10வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (பிப்.12) நடைபெறும் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவை, நமீபியா எதிர்கொள்கிறது. India vs Namibia இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நமீபியா அணியின் கேப்டன் கெர்ஹார்ட் எராஸ்மஸ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், நமீபியாவில் எங்களிடம் மின்னொளி வசதிகள் (floodlights) எதுவுமில்லை. கட்டமைப்பு ரீதியாக, இது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாகும். நேபாள பிரீமியர் லீக், ILT20 மற்றும் உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களைத் தவிர, மற்றவர்களுக்கு மின்னொளியில் விளையாடிப் பழக்கமில்லை. இந்தப் போட்டிக்கு முன்னதாக எங்களுக்கு இரவு நேரப் பயிற்சி வழங்கப்படவில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவிற்கு இரண்டு இரவு நேரப் பயிற்சி செஷன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன். Namibia இப்போது கனடா அணி இரவு நேரப் பயிற்சியில் ஈடுபடப் போவதைப் பார்க்கிறேன். இதிலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் புரிந்துகொள்ளுங்கள். ஆனால், நாங்கள் களமிறங்கி எங்களது நமீபிய பாணியில் போராடுவோம் என்று தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்.
தொழிலதிபரைக் கரம்பிடிக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன்! - யார் இந்த சானியா சந்தோக்?
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், இளம் தொழிலதிபர் சானியா சந்தோக்-குக்கும், மும்பையில் அடுத்த (மார்ச்)மாதம் 5 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. பிரதமருக்கு திருமண அழைப்பு தனது மகன் திருமண விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் சென்று அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த வருடம் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், சானியா சந்தோக்-குக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது இந்தத் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கின்றனர். யார் இந்த சானியா சந்தோக்? சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரபல தொழிலதிபர் ரவி காய்-ன் பேத்தி. London School of Economics and Political Science கல்லூரியில் படித்த சானியா, பாவ்ஸ் பெட் ஸ்பா & ஸ்டோர் எல்எல்பி நிறுவனத்தின் பங்குதாரராகவும், இயக்குநராகவும் இருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இவர்களது குடும்பத்திற்கு இண்டர்கான்டினன்டல் என்ற ஹோட்டல் இருக்கிறது. இது தவிர புரூக்ளின் க்ரீமெரி என்ற ஐஸ் கிரீம் பிராண்ட் கடைகளும் இருக்கிறது. விலங்கு நலன் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட சானியா, இன்ஸ்டாகிராமில் 820 பாலோவர்ஸ்களைக் கொண்டிருக்கிறார்.
CSK: சிஎஸ்கே அணியுடன் கைகோக்கும் ஸ்கைபேக்ஸ் - இளைஞர்களைச் சென்றடைய எடுத்த முடிவு!
ஐபிஎல் 2026 சீஸனை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் பிரபல லக்கேஜ் பிராண்டான ஸ்கைபேக்ஸ் அதிகாரபூர்வ கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், வரும் சீஸனில் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ லக்கேஜ் பார்ட்னராக ஸ்கைபேக்ஸ் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கான அறிவிப்பை விஐபி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி அதுல் ஜெயின் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.டி & தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் இருவரின் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்கைபேக்ஸ் சிஎஸ்கே இது விளையாட்டுத் துறையில் ஸ்கைபேக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் இந்திய கலாசாரத்தோடு நெருக்கமாக இணைந்திருப்பதை கருத்தில் கொண்டு, இளைஞர்களைச் சென்றடையும் முயற்சியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது என்று ஸ்கைபேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே நிர்வாகத்தின் தரப்பில், இந்த ஒப்பந்தம் ரசிகர்கள் மற்றும் அணிக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 மார்ச் 26 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த பிராண்ட் கூட்டணி ரசிகர்களிடம் கூடுதல் கவனம் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபிஎல் ஒரு விளையாட்டு தொடராக மட்டுமல்ல, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. அந்த திருவிழா சூழலில், சிஎஸ்கே அணியுடன் ஸ்கைபேக்ஸ் இணைந்திருப்பது அதன் பிராண்டுக்கும் விற்பனைக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Shubman: 'அவரின் எளிமையைக் கண்டு வியந்தேன்'- சுப்மன் கில்லை பாராட்டிய இங்கிலாந்து கால்பந்து வீரர்
இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன். சுப்மன் கில் ஆனால் சுப்மன் கில்லை போல ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் மிகக்குறைவு. என்னிடம் கால்பந்து குறித்து பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதில் இருந்தே அவருடைய ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் சொன்ன விஷயங்களில் இருந்து அவர் எதை எடுத்துக்கொள்வார் அல்லது அந்த விஷயங்கள் அவருக்கு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. ஆனால், இவ்வளவு இளம் வயதில் தன்னை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து கேள்விகளை கேட்டு, புதிய விஷயங்களை அறிய முயல்வது மிகவும் சிறப்பான ஒன்று. கிரிக்கெட் உலகில் இளம் வயதிலேயே பல சாதனைகள் செய்திருந்தாலும் அவருடைய எளிமை மற்றும் பண்புத்தன்மையை கண்டு நான் வியந்தேன். சுப்மன் கில் - ரியோ பெர்டினாண்ட் இந்த சந்திப்பு இந்தியாவிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. மிக விரைவில் நான் இந்தியா வருகிறேன் என்று சுப்மன் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

29 C